சட்டசபை கூட்டம் துவங்கியது..... எடியூரப்பா பெரும்பான்மை கோருவாரா.... ராஜினாமா செய்வாரா!
கர்நாடக சட்டசபை கூட்டம் மீண்டும் கூடியது. எடியூரப்பா பெரும்பான்மை கோருவாரா அல்லது ராஜினாமா செய்வாரா என்ற பரபரப்பு உள்ளது.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் பாஜகவின் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் சிறப்பு கூட்டம் துவங்கியுள்ளது. எடியூரப்பா பெரும்பான்மையை கோருவாரா அல்லது போதிய எண்ணிக்கை இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் கடத்தல் மற்றும் பணம், பதவி தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறுவது என்று பல நாடகங்கள் அரங்கேறின.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை தீர்மானத்தை எடியூரப்பா கொண்டு வர உள்ளார். அதன் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த நிலையில், போதிய எண்ணிக்கை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான இந்த சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் கூட்டம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கூடியுள்ளது. காலையில் பதவியேற்க முடியாத எம்எல்ஏக்கள் பதவியேற்க உள்ளனர்.