மகதாயி பிரச்சினை: கர்நாடகாவில் முழு அடைப்பால் தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி நள்ளிரவு முதல் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டது.
Recommended Video
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று காலை முதல் நடைபெறும் பந்த் காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை. தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையில் பிரதமர் தலையிடக் கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கன்னட சலுவளி வாட்டாள்' என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இயல்பு வாழ்க்கை முடங்கியது
பெங்களூருவில் உள்ள பல பேருந்து நிலையங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் அரசு பேருந்துகள் இயங்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எல்லைகளில் நிறுத்தம்
கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஓசூர் எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறது.
பொதுமக்கள் அவதி
கர்நாடகா செல்லகூடிய நூற்றுக்கணக்கான பேருந்துகளும் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தபட்டன. இதே போல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கர்நாடகா பேருந்துகள் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விடுமுறை அறிவிப்பு
அதே போல நீலகிரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளும், பன்னாரி வழியாக இயக்கப்படும் பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மாலை 6 மணிக்கு பிறகே தமிழக பஸ்கள் கிளம்ப முடியும். பந்த் காரணமாக தலைநகர் பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. விப்ரோ நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.