விவசாயிகள் தற்கொலை பிரச்சினை.. செப்டம்பர் 5ல் கர்நாடகா பந்த்!
பெங்களூர்: விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 5ம் தேதி, சனிக்கிழமை கர்நாடகாவில் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகள் சங்கம், பசுமை சேனை சங்கம் ஆகியன கூட்டாக இணைந்து இப்போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.
"கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் எங்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை. எனவே பந்த் நடத்துகிறோம். இதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் நுழையக்கூடாது. முழுக்க இது விவசாயிகளின் பந்த் மட்டுமே" என்றார் விவசாயிகள் சங்க தலைவர் சாந்தகுமார்.
அரசு ஆதரவு இல்லை என்பதால் பஸ்கள் வழக்கம்போல ஓடும் என்று தெரிகிறது. பெங்களூர்-மைசூர் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில்தான் பந்த் பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு நகரங்களிலும் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று தெரிகிறது.
தென் கர்நாடகாவிற்குள் சரக்கு வாகனங்கள் இயங்குவதில் பாதிப்பு ஏற்படலாம்.