விஹெச்பி நிர்வாகி மரணத்தை கண்டித்து இன்று கர்நாடகா பந்த்! இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை
பெங்களூர்: விஹெச்பி நிர்வாகி குட்டப்பா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கர்நாடகாவில் இன்று இந்து அமைப்புகள் நடத்தும் பந்த்துக்கு சில பகுதிகளில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தலைநகர் பெங்களூர் உட்பட பல பகுதிகளில் ஆதரவு கிடைக்கவில்லை.
திப்புசுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடுவதாக, அறிவித்த கர்நாடக அரசு, கடந்த 10ம் தேதி மாநிலம் முழுவதும் விழா நடத்தியது.
பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குடகு மாவட்டத்தின் தலைநகர் மடிகேரியில், நடைபெற்ற எதிர்ப்பு பேரணியின்போது இரு தரப்புக்கும் வன்முறை வெடித்தது. அப்போது குடகு மாவட்ட விஹெச்பி தலைவர் குட்டப்பா உயிரிழந்தார். மேலும் இருவர் பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, 13ம் தேதியான இன்று, மாநிலம் தழுவிய பந்த்துக்கு விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பாஜக இதற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
பந்த் காலை முதல் மாலை வரை நடைபெறும். மங்களூர், உடுப்பி உள்ளிட்ட கடலோர கர்நாடக மாவட்டங்களில் பந்த்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. அங்கு பஸ்கள் இயங்கவில்லை. வாணிப நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தும்கூர் பகுதியில் பஸ் மீது கல்வீச்சு நடந்துள்ளது. அதேநேரம், வட கர்நாடகாவிலும், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.