மகதாயி நதிநீர் பிரச்சினை: கர்நாடகாவில் பந்த் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடகா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெங்களூரு: மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிடக்கோரி கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் பந்த் தொடங்கியுள்ளது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையில் பிரதமர் தலையிடக் கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். கன்னட சலுவளி வாட்டாள்' என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஓசூர் எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறது.
மாலை 6 மணிக்கு பிறகே கர்நாடகாவிலிருந்து தமிழக பஸ்கள் கிளம்ப முடியும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக தலைநகர் பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளன.