தமிழக பதிவெண் காரணம்.. பெங்களூரில் ரோட்டோரம் நிறுத்தப்பட்ட காரை நொறுக்கிய கும்பல் #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடத்தப்பட்டது.
இது தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டமாக இல்லாமல், தமிழர்களுக்கு எதிரான போராட்டமாக சில அமைப்புகள் மாற்ற முயன்றன. இதன் ஒரு பகுதியாக பெல்லாரியில் தமிழக பதிவெண் கொண்ட 3 லாரிகள் கல்வீச்சுக்கு உள்ளாகின. இதேபோல ஜெயநகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் கல்வீச்சுக்கு உள்ளாகியுள்ளது,.
அந்த சான்ட்ரோ காரில் தமிழக பதிவெண் இருந்ததே தாக்குதலுக்கு காரணம். பைக்கில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் காரின் கண்ணாடிகள் நொறுங்கின. இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்ற அதே பகுதியிலுள்ள மலபார் ஜுவல்லரி மீதும் வன்முறை கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவங்களால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள் பதுக்கி வைக்கும் நிலை பெங்களூரில் நிலவுகிறது.