சிஐஎஸ்எஃப் காவலரோடு தகராறு: சென்னை வக்கீல்கள் 9 பேருக்கு கர்நாடக பார் கவுன்சில் ஓராண்டு தடை
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஐஎஸ்எஃப் காவலரோடு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் 9 வழக்கறிஞர்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு வருத் வழக்கறிஞர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் வழக்கமான நடைமுறையில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுப்புவது வழக்கம்.
சோதனை மையத்தில் பெண் வழக்கறிஞரை சோதனை செய்யும் போது வீடியோ எடுத்ததாகக் கூறி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன், பிற வழக்கறிஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சோதனை அறையில் இருந்த திரைச்சிலைகளை கிழித்தனர். வீடியோ காட்சிகளை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக 9 வக்கீல்கள் மீதும் உயர் நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டது. அவர்கள் மீதான விசாரணை கர்நாடக பார்கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக கர்நாடக பார்கவுன்சில் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் விசாரணை நடந்தது. வக்கீல்கள் 9 பேரும் ஆஜராகி வாதிட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், 9 வக்கீல்களையும் ஒரு ஆண்டு தொழில் செய்ய தடை விதித்து கர்நாடக பார்கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.