டிஐஜி ரூபா மாற்றம் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடியூரப்பா முறையீடு!
கர்நாடக சிறை டிஐஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து உள்துறை அமைச்சரிடம் முறையிட்டதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சிறை டிஐஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து உள்துறை அமைச்சரிடம் முறையிட்டதாக முன்னாள் முதல்வரும் கர்நாடக மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தமிழகம் மற்றும் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை என டிஜிபி சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.
உயர்மட்ட விசாரணை
இதுகுறித்த உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. விசாரணைக்குழு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரூபா மீது குற்றச்சாட்டு
இதைத்தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகம் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டி வரும் டி.ஐ.ஜி. ரூபாவை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ரூபா திடீர் இடமாற்றம்
இந்நிலையில் இன்று ரூபா திடீர் என பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை பொறுப்பில் இருந்து பெங்களூர் நகர போக்குவரத்து துறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராஜ்நாத் சிங்கிடம் முறையீடு
டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சரிடம் முறையிட்டதாக கர்நாடக பாஜக தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவரான எடியூரப்பா ரூபா இடமாற்றம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முறையிட்டதாக தெரிவித்துள்ளார்.