விடாது கருப்பு- மோடி அரசு ஏழைகளுக்கு எதுவும் செய்யாது என அமித்ஷா பேசியதாக மொழிபெயர்த்ததால் சர்ச்சை
கர்நாடக பாஜக மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதையே செய்து வருகிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலையொட்டி அமித்ஷா பேசிய பேச்சுக்களை பாஜக எம்பி கன்னடத்தில் தவறாக மொழிபெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. அதுபோல் பாஜகவும் ஆட்சியை பிடிக்க பாடாய்படுகிறது.
இந்த தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூரில் கேம்ப் அடித்துள்ளார் அமித்ஷா. இவர் தவாங்கிரியில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊழலுக்காக போட்டி அமைத்தால் அதில் எடியூரப்பாவின் ஆட்சிதான் முதலிடத்தை பிடிக்கும் என்றார்.
காங்கிரஸ் கட்சி நன்மை
எடியூரப்பா பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை மறந்து சொந்த கட்சிக்காரரையே அமித்ஷா ஊழல்வாதி என்று கூறியதால் கர்நாடக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நன்மையே நடக்கிறது.
இந்தியில் பேச்சு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு துளிர் விட்டுள்ளது. அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மோடி அரசு குறித்தும் காங்கிரஸ் அரசு குறித்தும் இந்தியில் பேசி வந்தார்.
தலித்துகளுக்கும் ஏழைகளுக்கும்
இந்தியில் பேசுவதை பாஜக எம்பி பிரலாத் ஜோஷி கன்னடத்தில் மொழிபெயர்த்தார். அப்போது ஏழைகளுக்கும் ,தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார் என அமித்ஷா பேசியதை நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என ஜோஷி மொழிபெயர்ப்பு செய்தார்.
காங்கிரஸுக்கு பிரசாரம்
இது கர்நாடக காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு பாஜகவினரே பிரசாரம் செய்வது போல் இருந்தது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும் அச்சத்திலும் உள்ளனர். பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் இவ்வாறு பொது இடத்தில் கண்டபடி பேசுவது கட்சிக்கு ஆபத்தை கொடுக்கும் என்று உணர வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் முணுமுணுத்தனர்.