அன்று எடப்பாடி.. இன்று எடியூரப்பா... ஆட்சியை தக்க வைக்க கை கொடுக்குமா இடைத்தேர்தல்கள்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நூலிழை பெரும்பான்மையுடன் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு இடைத்தேர்தல்கள் வெற்றி மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசும் இதேநிலைமையை எதிர்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருந்தன. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது (சபாநாயகரை தவிர்த்து). அந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை முதலில் அறிவித்தது தேர்தல் ஆணையம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனால் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகள் குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் முதலில் அறிவிக்கப்படவில்லை.
மேலும் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளின் வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதனால் மொத்தம் 22 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ
அன்று நெருக்கடியில் எடப்பாடி அரசு
22 தொகுதி தேர்தல்களுக்குப் பின்னர் சட்டசபையில் அதிமுகவுக்கு பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் இடைத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 4 அல்லது 5 தொகுதிகளில் வெல்ல வேண்டிய நெருக்கடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு இருந்தது.
அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்தது
ஆனால் இடைத்தேர்தல்களில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் பெரும்பான்மையைவிட அதிகமாக 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்தது. தற்போது கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் இதே நிலைமையை எதிர்கொண்டிருக்கிறார்.
எடியூரப்பா நிலைமை
கர்நாடகாவில் தற்போதைய நிலையில் சட்டசபையில் மொத்தம் 207 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 104 எம்.எல்.ஏக்கள். சுயேட்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் நூலிழைப் பெரும்பான்மையுடன் இருக்கிறது எடியூரப்பா அரசு.
தக்க வைப்பாரா எடியூரப்பா?
15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் முடிவடைந்த பின்னர் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 222 ஆக உயரும். அப்போது எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவை 112 இடங்கள். ஆகையால் இடைத்தேர்தல்களில் 8 இடங்களில் எடியூரப்பா அரசு வெல்ல வேண்டும். (சபாநாயகர், சுயேட்சை ஆதரவு இல்லாமல்). அப்போதுதான் பெரும்பான்மை பலத்துடன் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தொடர முடியும். இல்ல்லையெனில் எந்த நேரத்திலும் கவிழும் அரசாகவே எடியூரப்பா அரசு இருக்கும்.