கர்நாடகாவில் குவாட்டரும், பெட்ரோலும் காஸ்ட்லியாக போகுது.. பட்ஜெட்டில் இடியை இறக்கிய குமாரசாமி
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வரும், நிதி துறையை தன்வசம் வைத்துள்ளவருமான, எச்.டி.குமாரசாமி, சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது கர்நாடகாவில் ரூ.2 லட்சம் வரை விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.34,000 கோடி செலவாகும். இதை சமாளிக்க வேறு வழிகளில் வரிகளை கூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் குமாரசாமி.
இதன்படி, பெட்ரோல் மீதான மீதான செஸ் வரி தற்போதுள்ள 30 சதவீதம் என்பதில் இருந்து 32 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.14 அதிகரிக்கும். டீசல் மீதான வரி 19 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டீசல், லிட்டருக்கு ரூ.1.12 விலை உயர உள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டால் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான் என குமாரசாமி கூறியுள்ளார்.
இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL)மீதான கலால் வரி 18 அடுக்குகளுக்கும் தலா 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதேபோல மின் பயன்பாடு மீதான வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, விவசாய கடனை உடனே தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எடியூரப்பா அறிவித்தார். ஆனால் பிரதமர் மோடியிடமிருந்து எந்த நிதி உதவியும் கர்நாடகாவிற்கு கிடைக்கவில்லை. அதை வாங்கித்தர பாஜகவினருக்கு துப்பு இல்லை. மத்தியில் டீசல், பெட்ரோல் விலை உயர்வு பல முறை நடந்துவிட்டது. அதை கேட்க இவர்களுக்கு திராணி இல்லை. கஷ்டப்பட்டு நிதி நிலைமையை சரி செய்ய நான் செய்யும் முயற்சியை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டார்களா? என ஆவேசம் காட்டினார்.