கர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை
கர்நாடக முதல்வராக குமாரசாமி பெறுப்பேற்று ஒரு வாரத்திற்கு பின் தற்போது அமைச்சரவை ஒதுக்கீட்டில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக முதல்வராக குமாரசாமி பெறுப்பேற்று ஒரு வாரத்திற்கு பின் தற்போது அமைச்சரவை ஒதுக்கீட்டில் சமரசம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ்- மஜத கூட்டணியின் அமைச்சரவை இறுதி வடிவத்தை எடுத்துள்ளது.
கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார்.
ஆனாலும் கடந்த ஒருவாரமாக அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது. முக்கியமான பிரிவுகளை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் உருவாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவை ஒதுக்கீட்டில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் உள்துறை, வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, கல்வி, போக்குவரத்து, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகிய முக்கியமான துறைகளை காங்கிரஸ் பெறுகிறது. மஜத பொதுப்பணி துறை, வருவாய், கூட்டுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளை பெறுகிறது. அதிகம் பிரச்சனைக்குள்ளான நிதி துறையை மஜத கவனிக்க உள்ளது.
நிதி துறையை குமாரசாமியே வைத்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் வெள்ளி, சனி முழு அமைச்சரவை விவரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.