எல்லாம் சுபம்.. காங்கிரசுக்கு உள்துறை, மஜதவுக்கு நிதித்துறை! 6ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடையே நடைபெற்று வந்த அமைச்சரவை விரிவாக்க பேச்சுவார்த்தைகள் சுபம் போடப்பட்டு முடிவுக்கு வந்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை அமைச்சகமும், மஜதவுக்கு நிதி அமைச்சகமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். மே 23ம் தேதி மஜதவின் குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசின் பரமேஷ்வர் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிலையில், முக்கிய துறைகளை எந்த கட்சி வைத்துக்கொள்வது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியானதால் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் சுபம்.. காங்கிரசுக்கு உள்துறை, மஜதவுக்கு நிதித்துறை! 6ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் https://t.co/8EDm9e0mMH #Karnataka pic.twitter.com/5ItEZV0OiF
— Oneindia Tamil (@thatsTamil) June 1, 2018
இன்று மாலை குமாரசாமி மற்றும் பரமேஷ்வர் இருவரும், ஆளுநர் மாளிகையில் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தாங்கள் உருவாக்கியுள்ள பட்டியலை அளித்தனர். அதேநேரம், அமைச்சர்கள் பெயர் இன்னும் வெளியாகவில்லை. துறைகள் அடங்கிய பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.
உள்துறை, நீர்ப்பாசனம், சுகாதாரம், விவசாயம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட 22 அமைச்சக துறைகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளன. நிதித்துறை, கலால், பொதுப்பணித்துறை, கல்வி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 அமைச்சக துறைகள் மஜதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
"காங்கிரஸ்-மஜத நடுவேயான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து அனைத்தும் சுமூகமாக செட்டில் ஆகிவிட்டது" என்று காங்கிரஸ் சீனியர் தலைவர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் அறிவித்தார்.
பரமேஷ்வர் கூறுகையில், "இரு கட்சிகளுமே கூட்டணிக்காக சில கோரிக்கைகளை விட்டு கொடுத்துள்ளன, சிலவற்றை கேட்டுப் பெற்றுள்ளன" என்றார்.