கர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்று இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்காத சில மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பெங்களூர்: கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்று இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்காத சில மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும் பல் பிரச்சனைகள் காரணமாக அமைச்சரவை ஒதுக்கீடு தாமதம் செய்யப்ட்டது.
அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 22 பேரும், மஜத சார்பில் 12 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். முக்கியமான நபர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். டி.கே.சிவக்குமார் நீர் வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையாவை தோற்கடித்த ஜி.டி. தேவெ கெளடாவும் அமைச்சர்களாகி உள்ளார். அதேபோல் கேஜெ ஜார்ஜ், டிசி தமன்னா ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்காத சில மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர்கள் இது குறித்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சுமார் 9 பேர் இப்படி அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
எம்பி பாட்டில், ரோஷன், இராமலிங்க ரெட்டி, கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், ஈஸ்வர், சாமானுர், சிவசங்கரப்பா, சதிஷ் ஆகியோர் இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றால் ஆறு மாதத்திற்கு பின் அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலகிக் கொள்வோம் என்று மிரட்டடியதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனால் எம்எல்ஏக்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் வட்டராம் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.