நாளை பேச்சுவார்த்தை.. அதுவரை காவிரியில் நீர் திறப்பில்லை.. கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
பெங்களூர்: காவிரி பற்றிய உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அனைத்து கட்சியினருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தினார். நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில், தமிழகம்-கர்நாடகா நடுவே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், அதுவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி வீதம் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு. மேலும் சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி காவிரி நீர், குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது கர்நாடகா.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதியதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க கூடாது தமிழக அரசு தரப்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்திற்கு 27ந் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு தலா 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு, விதானசவுதாவில் கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கடந்தமுறை அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்து கர்நாடக மக்களின் கோபத்திற்கு ஆளான பாஜக இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. அக்கட்சியின் மேலவை தலைவர் ஈஸ்வரப்பா கூட்டத்தில் பங்கேற்றார். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் அக்கட்சி மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி பங்கேற்றுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மதியம் 2 மணிக்கு விதானசவுதாவில் தொடங்கும், அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விவாதித்து, காவிரியில் தண்ணீர் திறப்பதா வேண்டாமா என முடிவெடுக்க உள்ளனர்.
இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தெரியவந்துள்ளது. நாளை டெல்லியில் தமிழகம்-கர்நாடக முதல்வர்கள் மத்தியில் காவிரி பற்றிபேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் உமா பாரதி அழைப்புவிடுத்துள்ளார். எனவே, அக்கூட்டத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது. அதுவரை தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டு நீரை வீண் செய்ய வேண்டாம் என்று அனைத்து கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர். சட்ட வல்லுநர்களும் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றமே, இந்த பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்தியுள்ளதால், அதுவரை தண்ணீர் திறக்காமல் இருந்தாலும் நீதிமன்றம் நம்மீது கோபப்படாது என்பது அனைத்துக் கட்சி தலைவர்கள் கருத்தாகும். இதனால் தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.