பெங்களூரு மெட்ரோவில் இந்தி போர்டுகளை அகற்றுங்கள்... மோடிக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள இந்தி போர்டுகளை அகற்றவேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும், இருக்கும் போர்டுகளை அகற்றவும், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ' மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்துள்ள இந்தி பெயர் பலகை கன்னட மக்களின் உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது என்றும், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைப்பதே சரியாக இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள அவர், மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை கருத்தில்கொண்டு, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தி பெயர் பலகைகளில் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை, கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த போராட்டம் தீவிரமடைந்து வருவதால், மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள இந்தி பெயர் பலகைகளை அகற்ற, கர்நாடக அரசின் அனுமதியை, பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கேட்டிருந்தது. ஆனால், இதுபற்றி, நேரடியாகப் பதில் அளிக்காமல், முதலமைச்சர் சித்தராமையா தற்போது மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.