எதிர்கட்சிகள் தொடர் அமளி.."ஆங்ரி பேர்டு" ஆன கர்நாடக முதல்வர் சித்தராமையா பட்ஜெட் நகலை வீசியெறிந்தார்
பெங்களூரூ : கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமயா, பட்ஜெட் நகலை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் குறித்து சித்தராமையா வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது மாநில அரசின் திட்டங்களுக்கு போதியளவு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.
இதற்கு பா.ஜ.க எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். சித்தராமையாவை பட்ஜெட் உரையை வாசிக்கவிடாமல் இடையூறு செய்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், பா.ஜ.க. உறுப்பினர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவையில் அமைதிகாக்குமாறு சபாநாயகர் காகோடு திம்மப்பா கூறினார்.
இதனை பொருட்படுத்தாத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டே இருந்ததால், ஆவேசமடைந்த முதலமைச்சர் சித்தராமையா, பட்ஜெட் நகலை அவையில் வீசி எறிந்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.