ஆந்திராவில் ரயில் விபத்து: கர்நாடகா காங். எம்.எல்.ஏ. உட்பட 6 பேர் பலி; 20 பேர் படுகாயம்
அனந்த்பூர்: ஆந்திராவில் பெங்களூருவில் இருந்து நான்டட் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் கர்நாடகா காங். எம்.எல்.ஏ. வெங்கடேஷ் நாயக் உட்பட 6 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள நான்டட் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டம் பெனுகொண்டா பகுதியில் மடகசிரா என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்ற போது லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கிரானைட் ஏற்றி சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
Bangalore-Nanded Express train accident: More visuals from the spot pic.twitter.com/C5pR2PYSsf
— ANI (@ANI_news) August 24, 2015
இதில் ரயிலின் ஹெச்-1 உட்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. ஹெச்-1 பெட்டியில் இருந்த கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கடேஷ் நாயக் உட்பட 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிரானைட் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்தார். மேலும் 20 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பலியான வெங்கடேஷ் நாயக் கர்நாடகாவின் தேவதுர்க் தொகுதியின் எம்,எல்.ஏ..
இந்த ரயில் விபத்தால் கர்நாடகாவின் பெங்களூரு- ஆந்திராவின் குண்டக்கல் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மீட்புப் பணிகளும் ரயில் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
23 பேரை பலிகொண்ட இடம்..
கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து நான்டட் நோக்கி சென்ற இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இதே ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில்தான் கொத்தசேவூர் என்ற இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.