கர்நாடக காங்கிரஸ் கலாட்டா: அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷ்
பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதல் அளித்துள்ளதன் பேரில், கர்நாடக அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சரவையில் இருந்து 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர், புதிதாக 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் நடிகரும், மண்டியா மாவட்டத்து காங்கிரஸ் முக்கிய புள்ளியுமான அம்பரீஷும் பதவி பறிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர். இவர் வீட்டு வசதி அமைச்சராக பதவியில் இருந்தார். ஆனால், பணியில் திறமை காட்டவில்லை என்பதால் பதவி பறிப்புக்கு உள்ளானார்.
இவரது நீக்கத்தை கண்டித்து, ஆதரவாளர்கள் பெங்களூர்-மைசூர் சாலையில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். கன்னட திரையுலகமும், அம்பரீஷை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அம்பரீஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மதியம் அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தனி உதவியாளர் ஸ்ரீநிவாஸ் என்பவர் மூலம், துணை சபாநாயகருக்க கொடுத்தனுப்பினார். ஆனால் அம்பரீஷ் நேரடியாக வராமல் ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என துணை சபாநாயகர் கூறிவிட்டதால் ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை. அம்பரீஷ் மண்டியா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.