கர்நாடகா: ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி.. காங்கிரஸின் தலித் முதல்வர் ஐடியா!
கர்நாடகாவில் தலித் ஒருவரை முதல்வராக அறிவிக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் தலித் ஒருவரை முதல்வராக அறிவிக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு இருக்கிறது. இது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையில் முக்கிய கூட்டணி பாலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த அறிவிப்பு நாளை பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 15ம் தேதி) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது..
கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் காங்கிரஸ், பாஜக என யார் அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அவர்களுக்கே, ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் பாஜக, காங்கிரஸ் இரண்டும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இருக்கிறது.
தற்போது சித்தராமையாவை தவிர்த்துவிட்டு பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் மூன்று தலித் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான புள்ளியான, மல்லிகார்ஜுனா கார்கே முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் எச். சி மஹாதேவப்பா, கே எச் முனியப்பர் ஆகியோர் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
காங்கிரஸின் இந்த முடிவிற்கு ஆதரவாக சித்தராமையாவும் உள்ளார். தலித் ஒருவர் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பாக முதல்வராவதை நானும் விரும்புகிறேன், எனக்கு முதல்வராகும் விருப்பம் இல்லை, காங்கிரஸ் கட்சி முழுப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் கூட தலித் ஒருவர் முதல்வராக வேண்டும், நான் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன், என்றுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கவுடா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். இது நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு உதவும் என்று நினைக்கிறார். ஆனால் அவரின் மகன் குமாரசாமி பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிங்கப்பூரில் பாஜக உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த ''தலித் சிஎம்'' முடிவு, இரண்டு பேரின் மனதையும் மாற்றியுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கண்டிப்பாக காங்கிரஸின் தலித் முதல்வர் முடிவை ஆதரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி ஆதரிக்கும் பட்சத்தில் இது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு பெரிய பலன் அளிக்கும். அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு தலித் முதல்வராகும் அறிவிப்பை ஆதரிப்பதை விட வேறு வழியில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் பாஜக கட்சியால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடியாது என்றும் கூறப்படுகிறது. அந்த கட்சியில், எடியூரப்பா கண்டிப்பாக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.