ஜெ. "மூலமாக" துஷ்யந்த் தவே சம்பாதித்தது ரூ. 95 லட்சம்!
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பி.வி. ஆச்சார்யா ரூ. 1 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் என்றால் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் கர்நாடகத்துக்காக ஆஜரான துஷ்யந்த் தவே ரூ. 95 லட்சம் அளவுக்கு சம்பாதித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் நான்கு பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி, மற்றவர்களுக்கு தலா ரூ. 10 கோடி என அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நான்கு பேரும் குமாரசாமி புண்ணியத்தில் விடுதலையாகி விட்டனர். ஆனால் இதை எதிர்த்து கர்நாடக அரசுத் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரானவர் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இவரது வாதத்திறமை காரணமாகவும், வழக்கின் தன்மை காரணமாகவும் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தவே சம்பளம்
இந்த வழக்கில் ஆஜராகியதற்காக தவேவுக்கு சம்பளமாக 95 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் 2 வக்கீல்கள்
இவர் தவிர கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான பிற வக்கீல்களான ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் சந்தேஷ் செளதா ஆகியோருக்கு தலா 32 லட்சத்து ஆயிரத்து 70 ரூபாய் மற்றும் 42 லட்சத்து 23 ஆயிரத்து 643 ரூபாயும் சம்பளமாக தரப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அட்வகேட் ஜெனரலுக்கு ரூ. 2 லட்சம்
கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக்குக்கு 2 லட்சத்து 43 ஆயிரத்து 657 ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் அளித்துள்ள ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதையும் தமிழக அரசிடமிருந்து கர்நாடகம் வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.