நெருங்கும் கர்நாடகா தேர்தல்... வைரலாகும் வாக்காளர் அட்டை மாடலில் திருமண அழைப்பிதழ்!
கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை மாடலில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடகாவில் அடுத்தமாதம் 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அங்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போட்டிபோட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹங்கல் நகரைச் சேர்ந்த சித்தப்பா தோத்தசிக்கன்னவர் என்ற இளைஞர் தனது திருமண அழைப்பிதழை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற தோற்றத்தில் வித்தியாசமாக அச்சடித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தோத்தசிக்கன்னவருக்கும், ரனிபென்னுரு நகரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும்,இம்மாதம் 27ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண அழைப்பிதழில் மணமக்களின் புகைப்படமும், வாக்காளர் பெயர் என்ற இடத்தில் இருவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் இருக்கும் இடத்தில் 'SJMRG27042018’ என்ற எண் உள்ளது. இது மணமக்களின் இனிஷியல் எழுத்துக்களையும், அவர்களது திருமண நாளையும் குறிக்கிறது.
அதோடு, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்தத் திருமண அழைப்பிதழில், 'ஓட்டு முக்கியத்துவம் வாய்ந்தது, குடும்பத்துடன் வாக்களிக்க மறந்துவாதீர்’ என்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது.
கன்னட செயல்பாட்டாளரான சித்தப்பா, ரயில்வே பணியாளர் ஆவார். தனது வித்தியாசமான இந்தத் திருமண அழைப்பிதழை தனது உறவினர்கள், கர்நாடக அரசியல் பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு சித்தப்பா வழங்கி வருகிறார்.
இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.