கர்நாடகாவில் அனைத்து அரசு சேவைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாகிறது
கர்நாடகா மாநிலத்தில் இனி அனைத்து விதமான சேவைகளை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் என சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் இனி அனைத்து விதமான சேவைகளை பெறவும், ஆதார் அட்டை கட்டாயம் என சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன்படி இனி சாதி சான்றிதழ் தொடங்கி வருமான வருமான சான்றிதழ் வரை அனைத்தையும் பெற ஆதார் கட்டாயம் ஆகி உள்ளது.
இதற்காக இ- சைனிங், இ- லாக்கர் என நிறைய புதிய தொழில்நுட்பங்கள் பல கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவிலேயே கர்நாடகாவில் மட்டும் இந்த சட்டம் முதன் முதலாக அமலுக்கு வருகிறது.
இந்த புதிய சட்டம் மக்களின் நேரத்தையும், செலவையும் குறைக்கும் எனப்படுகிறது. மேலும் இதன்முலம் மக்கள் பெரிய அளவில் பயன் அடைவார்கள் என்று கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.
முதல்வரின் நேரடி கவனிப்பு
கர்நாடக மாநிலத்தில் இனி எல்லா அரசு சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை ஆன்லைனில் பெற ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாம் ஆதார் விவரங்களை அளிக்கும் பட்சத்தில் சான்றிதழ்கள் ஆன்லைனில் நமக்கு வழக்கப்படும். இந்த செயல்பாடு அனைத்தும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
எல்லோருக்கும் இ- லாக்கர்
இதன்படி கர்நாடகாவில் இருக்கும் மக்களுக்கு தனியாக 'இ- லாக்கர்' வழங்கப்படும். ஆன்லைனில் பெறும் சான்றிதழ்கள் அனைத்தும் இந்த இ- லாக்கரில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்படும். பின் அதை நாம் தேவைபடும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் என அனைத்து விதமான முக்கிய ஆவணங்களும் இனி இந்த முறையின் மூலமே அளிக்கப்படும். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனியாக இ- லாக்கர் அளிக்கப்படும்.
வருகிறது இ- சைனிங்
மேலும் இதற்காக 'இ- சைனிங்' எனப்படும் மின்னணு கையெழுத்து முறையை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இ- சைனிங் மூலம் மட்டுமே சான்றிதழ்கள் அடங்கி இருக்கும் இ- லாக்கரை திறக்க முடியும். அதன் மூலம் நம்முடைய சான்றிதழ்களை நாம் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
அரசின் செலவு
மேலும் இதன் காரணமாக மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று மணிக்கணக்கில் நிற்க வேண்டாம் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதற்கான செலவு அனைத்தையும் கர்நாடக மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். ஒரு சான்றிதழ் வழங்க இந்த முறையின் மூலம் 5 ரூபாய் செலவு ஆகும் என கர்நாடக அரசு கணித்துள்ளது.