ரூ.40க்கு பதில் 4 லட்சம் ரூபாயை டாக்டரின் அக்கவுண்டில் இருந்து தீட்டிய டோல் பூத்!!
உடுப்பி அருகே 40 ரூபாய்க்கு பதில் 4 லட்சம் ரூபாயை டாக்டரின் அக்கவுண்டில் இருந்து டோல் பூத் ஊழியர்கள் தீட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள டோல் பூத்தில் 40 ரூபாய்க்கு பதில் டாக்டரின் அக்கவுண்டில் இருந்து 4 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராவ். இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது காரில் கடற்கரை சாலை வழியாக மும்பை சென்றுள்ளார். கொச்சி- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பி அருகே உள்ள குண்டுமி டோல் பூத்தில் இரவு 10.30மணியளவில் சென்றார்.
அப்போது அவரிடம் சுங்க கட்டணமாக 40 ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது டெபிட் கார்டை டாக்டர் டோல் பூத் ஊழியரிடம் கொடுத்துள்ளார்.
ரசீதை பார்த்து அதிர்ந்த டாக்டர்
கட்டணத்தை எடுத்துக்கொண்ட ஊரியர்கள் அதற்கான ரசீதையும் கார்டையும் கொடுத்துள்ளனர். ரசீதை பார்த்த டாக்டர் அதில் 4 லட்சம் ரூபாய் தீட்டப்பட்டுள்ளதாக வந்திருப்பதை பார்த்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி
அவரது செல்போனுக்கும் 4 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த ஊழியர்கள் 40 ரூபாய் தான் எடுக்கப்பட்டது என அடித்து பேசினர்.
போலீசில் புகார்
இதையடுத்து அருகில் உள்ள கோட்டா காவல்நிலையத்துக்கு சென்ற டாக்டர் ராவ் நடந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமை காவலருடன் மீண்டும் டோல் பூத்துக்கு வந்த டாக்டர் ராவ் தனது பணத்தை பெற்றுத் தரும்படி கேட்டுள்ளார்.
ரூ.3,99,960க்கு செக்
விவகாரம் போலீஸ் வரை போனதை உணர்ந்த ஊழியர்கள் தவறை ஒப்புக்கொண்டு பணத்தை தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 3,99,960 ரூபாய்க்கு அவர்கள் செக் கொடுத்தனர்.
ரொக்கமாக கேட்டு வாங்கிய டாக்டர்
அதனை ஏற்க மறுத்த டாக்டர் தனக்கு ரொக்கமாக வேண்டும் என கூறினார். இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் அவருக்கு 3,99,960 ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய டோல் பூத்தில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வசூலாகும் என போலீசார் தெரிவித்தனர்.