வாஸ்து சரியில்ல.. வாக்குப்பதிவு மெஷினோட இடத்தை மாத்துங்க.. பஞ்சாயத்தை கூட்டிய தேவ கவுடா மனைவி
கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி தொகுதியில் வாஸ்து பிரச்சனை காரணமாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவின் சாமுண்டேஸ்வரி தொகுதியில் வாஸ்து பிரச்சனை காரணமாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவ கவுடாவின் மனைவி கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றான சாமுண்டேஸ்வரி தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வாஸ்து பிரச்சனை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில்தான் ஜெடிஎஸ் கட்சியின் தலைவர் தேவ கவுடாவின் மனைவிக்கு வாக்கு இருக்கிறது. இதனால் அவர் அந்த தொகுதிக்கு வாக்களிக்க வந்துள்ளார். ஆனால் வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இருந்ததை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காலையிலேயே வந்த இவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடமானது, சரியான இடம் கிடையாது, வாஸ்து சாஸ்திரம் படி மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உடனே இடத்தை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர் வாக்களிக்க மறுத்ததை அடுத்து நிறைய பேரும் அவருடன் வாக்களிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து கடைசியில் வாக்களிக்கும் எந்திரம் வாஸ்து பார்த்து இடம் மாற்றப்பட்டுள்ளது. வாஸ்து பிரச்சனை காரணமாக இந்தியாவிலேயே வாக்குப்பதிவு எந்திரம் இடம்மாற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும்.