பொய்யான போஸ்டுகளை முடக்க திட்டம்.. கர்நாடக தேர்தலுக்காக களமிறங்கிய பேஸ்புக்!
கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருக்க பேஸ்புக் புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருக்க பேஸ்புக் புதிய வழிமுறை ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது. பொய்யான தகவல் பரப்பும் போஸ்டுகளை முடக்க பேஸ்புக் முடிவெடுத்து இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்கள் திருடப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இப்படி பேசி இருந்தார்.
இந்த திருட்டு மூலம் உலகம் முழுக்க நடந்த பல தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. அமெரிக்க தேர்தல், இந்திய நாடாளுமன்ற தேர்தல், பிரிக்சிட் ஆகிய தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.
கர்நாடக தேர்தல்
இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. பாஜக கட்சிதான் பேஸ்புக்கின் முக்கியமான வாடிக்கையாளர் என்றும் தகவல் வெளியானது. கர்நாடக தேர்தல் தொடங்கி இருக்கும் நிலையில் பேஸ்புக் இதில் எந்த விதமான முறைகேடும் செய்யாது என்று மார்க் கூறியிருந்தார். இதனால் சில நாட்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவும், பாஜக கட்சியும் பேஸ்புக்கிடம் உறுதிமொழி வாங்கி இருந்தது.
பூம் நிறுவனம்
இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலுக்காக ''பூம்'' என்ற சர்வதேச நிறுவனத்துடன் கைகோர்க்க பேஸ்புக் முடிவு செய்து இருக்கிறது. இந்த நிறுவனம்தான் கர்நாடக தேர்தல் முடியும் வரை பேஸ்புக்கில் உலவும் பொய்யான போஸ்டுகளை கட்டுப்படுத்த போகிறது. யார் யார் பொய்யான தகவல்களை பரப்புகிறார்களோ அந்த போஸ்டுகளை முடக்க இருக்கிறது.
எப்படி செய்யும்
இந்த நிறுவனத்தில் இதற்காக தனி குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் ஒன்று சேர்ந்து பேஸ்புக்கில் கர்நாடக தேர்தல் குறித்து எழுதப்படும் எல்லா போஸ்டுகளையும் ''ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்'' தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி செய்வார்கள். பின் அதில் பொய்யாக இருக்கும் போஸ்டுகளை முடக்குவார்கள். பேஸ்புக் மீது மீண்டும் மக்களுக்கு மதிப்பு வர வேண்டும் என்று இப்படி செய்து இருக்கிறார்கள்.
எப்படி முடக்குவார்கள்
இதன் மூலம் கண்டுபிடிக்கப்படும் தவறான பொய்யான போஸ்டுகளை 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் காட்டாது. அதேபோல் நியூஸ் இணையதளங்கள் பொய்யான தகவலை பேஸ்புக் மூலம் பரப்பினால், அதை குறித்து அந்த தளங்களுக்கு பேஸ்புக் தகவல் தெரிவித்து, அந்த செய்திகளை மட்டும் மொத்தமாக முடக்கும். தொடர்ச்சியாக பொய்யான தகவலை தெரிவித்தால், தேர்தல் முடியும் வரை அவர்களது போஸ்டுகள் மக்களுக்கு தெரியாத வகையில் பார்த்துக் கொள்ளும்.