காங்கிரஸை கைவிட்ட லிங்காயத்துகள்.. தனி மத அறிவிப்பிற்கு பின்பும் பாஜகவிற்கே ஆதரவு!
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், லிங்காயத்துகள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் பாஜக கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடத்து வரும் நிலையில், லிங்காயத்துகள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் பாஜக கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் பல தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 70க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் பாஜக பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் லிங்காயத்துகள் இருக்கும் தொகுதிகளில் எல்லாம் பாஜக கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது. லிங்காயத்துக்கள் அதிகம் இருக்கும் வடக்கு கர்நாடகா, மத்திய கர்நாடகாவில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது.
முக்கியமாக தற்போது மத்திய கர்நாடகாவில் பாஜக 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதேபோல் மும்பை கர்நாடகாவிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தனி மத அறிவிப்பிற்கு பின்பும் லிங்காயத்துகள் பாஜக கட்சிக்கே ஆதரவு அளித்துள்ளனர்.
தனி மத அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் உதவும் என்று கூறப்பட்டது. ஆனால் மோடி நிறைய இந்துத்துவா தலைவர்களை களமிறக்கி, லிங்காயத்துகளை மனதை மாற்றி இருப்பது தெளிவாக தெரிகிறது. இவர்களின் ஓட்டுக்களை வாங்க, இவர் நேபாளத்தில் சிவன் கோவிலில் பூஜை எல்லாம் செய்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் முக்கியமாக பயன்படுத்த நினைத்த ஆயுதம், அவர்களின் கைவிட்டு போய் உள்ளது.