நாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்.. காங். வேட்பாளர் நடிகர் அம்பரீஷ் எங்கே? கர்நாடகாவில் களேபரம்
Recommended Video
பெங்களூர்: கன்னட நடிகரும், எம்எல்ஏவுமான அம்பரீஷ் மீண்டும் மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டும் கூட, முதல்வர் சித்தராமையாவின் கண்களில் தட்டுப்படாமலும், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாமலும் கண்ணா மூச்சி ஆடி வருவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அம்பரீஷ். பிரபல நடிகரான இவர், 'மண்டியா த கண்டு' என்று கர்நாடக மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். அதாவது மண்டியாவின் ஆண் மகன் என்று இதற்கு அர்த்தம்.
மக்கள் இத்தனை அன்பு வைத்திருந்தும்கூட, அத்தொகுதி எம்எல்ஏவாக காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பரீஷ் உரிய பணிகளை செய்யவில்லை. அமைச்சர் பதவி கொடுத்த சித்தராமையா, இவரது திறனற்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, 2016ல் இவரது அமைச்சர் பதவியை பறித்துவிட்டார். இப்போது மண்டியா தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள அம்பரீஷுக்கு மீண்டும் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் கொடுத்தது.
நாளை வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
ஆனால், இதுவரை கட்சி சார்பில் கொடுக்கப்படும் பி-பார்ம் வாங்காமலேயே உள்ளார் அம்பரீஷ். நாளைதான் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். இதுவரை அவர் கட்சியின் அதிகாரப்பூர்வ பி-பார்மை பெறவும் இல்லை, கட்சி தலைவர் பரமேஷ்வர் அல்லது முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து விளக்கமும் தரவில்லை.
சித்துவிற்கு டிமிக்கி
ஞாயிற்றுக்கிழமை மைசூரில் சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு அம்பரீஷுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. சித்தராமையா இவருக்காக அரை மணி நேரநம் காத்திருந்ததாகவும், ஆனால் அம்பரீஷோ சொல்லாமலே, பெங்களூரை நோக்கி காரில் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
போட்டியிட முடியாது
இதனிடையே நேற்று இரவு பரமேஷ்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது உடல்நிலை சரியில்லை என்பதால், தன்னால் போட்டியிட முடியாது என அம்பரீஷ் கூறியதாகவும், பதிலாக, தனக்கு நெருக்கமான, அமராவதி சந்திரசேகர் என்பவருக்கு டிக்கெட் கொடுக்கும்படியும், அவருக்கு ஆதரவாக வேண்டுமானால் தான் பிரச்சாரம் செய்ய ரெடி எனவும் கூறியுள்ளாராம். இதுவரை அம்பரீஷ் நிருபர்களுக்கும் பேட்டியளிக்கவில்லை. இது கண்ணாமூச்சி ஆட்டம் போல நீண்டுகொண்டுள்ளது.
ரஜினிகாந்த் நண்பர்
இதனிடையே நாளை காலை, 11 மணிக்கு அம்பரீஷ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே காங்கிரசில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அம்பரீஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர். அம்பரீஷின் மனைவி சுமலதா ரஜினிகாந்த் நடித்த முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகையாகும். அம்பரீஷுக்கு உடல்நலம் சரியில்லாத போது, தான் சிகிச்சை பெற்ற சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு, அம்பரீஷை அழைத்து செல்ல சுமலதாவுக்கு போனில் பரிந்துரைத்தார் ரஜினிகாந்த். இதன்பிறகு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அம்பரீஷ் சேர்க்கப்பட்டு உடல் நலம் தேறினார்.
காரணம் என்ன?
மண்டியாவில் மீண்டும் வெற்றி பெற முடியாது என்ற பயத்தால்தான் அம்பரீஷ் இப்படி கண்ணாமூச்சி ஆடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியமைத்தால், மீண்டும் அமைச்சர் பதவி தந்தால் போட்டியிடுவேன் என்று நெருக்கடி கொடுப்பதாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அம்பரீஷ் நடத்த உள்ள பிரஸ் மீட்டில் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.