கர்நாடக தேர்தல்: எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பளிக்காத பாஜக.. கட்சி அலுவலகத்தை சூறையாடிய தொண்டர்கள்
கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடவில்லை என்று உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இந்தமுறை போட்டியிடவில்லை என்று உறுதியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை எதிர்த்து பாஜக மேலிடத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் மைசூர் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக இதுவரை பாஜக நான்கு கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 72 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதன்பின் 82 பேர் கொண்ட 2வது பட்டியலை வெளியிடப்பட்டது. அதன்பின் 9 பேர் கண்ட 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 7 பேர் கொண்ட 4ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
எடியூரப்பாவின் மகன் ராகேவேந்திராவிற்கு இதில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எடியூரப்பா நேற்று மைசூரில் நடந்த கட்சி கூட்டத்தில் அறிவித்துள்ளார். சித்தராமையா மகன் யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியில் விஜயேந்திராவிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் வேறு ஒரு நபர் நிறுத்தப்பட இருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்று கூறப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் விஜயேந்திரா ஈடுபடுவார் என்று கூறப்பட்டுள்ளது. வருணா தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஜக மேலிடத்தை எதிர்த்து கட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள். பின் போலீஸ் தடியடி நடத்தி இவர்களை அப்புறப்படுத்தியது.
பாஜக மேலிடம் மேல் யாரும் கோபம் கொள்ள வேண்டாம், பாஜகவின் இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று எடியூரப்பாவும், விஜயேந்திராவும் தெரிவித்துள்ளனர்.