வேற வழியே இல்லை.. 1% ஓட்டுக்காக கர்நாடகாவில் ஊர் ஊராகப் போய் பேசப் போகும் மோடி!
Recommended Video
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வழியில்லை என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் உறுதிபடத் தெரிவித்துள்ளதால் கர்நாடக பாஜக வேறு வழியில்லாமல் தற்போது மோடியை வைத்து கர்நாடக மக்களின் ஆதரவைப் பெற முடிவு செய்துள்ளது.
உள்ளூர் முகங்களைக் காட்டி ஓட்டு வாங்க முடியாத நிலையில் கர்நாடக பாஜக உள்ளது. எதியூரப்பாவை பெரிதும் நம்பினர். ஆனால் அது கதைக்கு ஆகாது என்பது உறுதியாகி விட்டது. போதாக்குறைக்கு, எதியூரப்பாதான் நம்பர் ஒன் ஊழல் முதல்வர் என்று வாய் தவறி அமித் ஷா பேசியது பெரிய சர்ச்சையாகி விட்டது. பாஜகவை பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டது.
இதனால் காங்கிரஸின் அதிரடியை சமாளிக்க நேரடியாக மோடியைக் களம் இறக்கி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக முடிவு செய்துள்ளது. குறைந்தது 25 கூட்டங்களில் மோடியை பேச வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சட்டசபைத் தேர்தல்
மே 12ம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை பாஜகவின் கை அங்கு ஓங்கவில்லை. காங்கிரஸே வலுவாக உள்ளது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் அதையே சொல்லி வருகின்றன. பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது என்பதே கணிப்புகள் சொல்லும் கருத்தாக உள்ளது.
எடுபடாத பாஜக திட்டங்கள்
வாக்காளர்களைக் கவர பாஜக என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஆனால் எதுவும் எடுபட்டதாக தெரியவில்லை. மாறாக எல்லாமே பாஜகவுக்கு எதிராகவே போய்க் கொண்டுள்ளன. அமித் ஷா வந்தும் கூட புண்ணியம் இல்லை. வந்தவரால் தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டதே மிச்சம். இதனால் பாஜகவினர் நொந்து போயுள்ளனர்.
மோடியை வைத்து வித்தை
இதையடுத்து தங்களைக் காப்பாற்றி கரை சேர்க்க மோடியால் மட்டுமே முடியும் என்ற நப்பாசையுடன் அவரையே நேரடியாக களமிறக்கி பிரச்சாரம் செய்ய வைக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் அவர் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவுள்ளாராம்.
10 விசிட் - 25 கூட்டம்
மோடி கிட்டத்தட்ட 25 கூட்டங்களில் பேசி பிரச்சாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளாராம். இதற்காக குறைந்தது 10 முறை அவர் கர்நாடகத்திற்கு வருகை தரவுள்ளாராம். குறைந்தது ஒரு நாளைக்கு 2 கூட்டங்களில் பேச வைக்க திட்டம் உள்ளதாம்.
அமித் ஷா தீவிரம்
மோடி பிரச்சாரக் கூட்டங்களை இறுதி செய்வதில் அமித் ஷா தீவிரமாக உள்ளாராம். ஏற்கனவே அமித் ஷா பலமுறை கர்நாடகத்திற்கு வந்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். தற்போது மோடி கூட்டங்கள் குறித்து அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.
ஊர் ஊராகப் போகப் போகும் மோடி
கர்நாடக பயணத்தின்போது மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் மோடியை பயணிக்க வைக்கவுள்ளனராம். மோடி எல்லாப் பகுதிக்கும் நேரடியாகப் போனால்தான் நமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று பாஜக நம்புகிறதாம்.
பீகார் பிரச்சாரம்தான் டாப்
மோடி பிரதமரான பிறகு அதிகபட்சம் பீகாரில்தான் அதிக அளவிலான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அதாவது 31 கூட்டங்களில் பேசினார். அடுத்து உ.பி. சட்டசபைத் தேர்தலில் 24 கூட்டங்களில் பேசினார். இப்போது கர்நாடகத்திற்காக வியர்வை சிந்த வருகிறார்.
வாக்கு வித்தியாசம்
தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது ஒன்று அல்லது 2 சதவீத வித்தியாசத்தில்தான் இருக்கும் என பாஜக கணக்குப் போடுகிறது. கர்நாடகத்தில் பாஜகவை விட மோடிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி இந்த வாக்கு வித்தியாசத்தை தனக்கு சாதகமாக திருப்ப பாஜக எத்தனிக்கிறது. ஒரு பக்கம் மோடியை வைத்தும், மறுபக்கம் அமித் ஷாவின் கடுமையான தேர்தல் பணியை வைத்தும் கரை சேர பாஜக கணக்குப் போடுகிறது.