காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பு : கர்நாடக விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதால் கர்நாடக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
பெங்களூரு : காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இன்று வெளியான தீர்ப்பை கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் தமிழக விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் குறைத்துள்ளது. இதன் பிறகு இந்த வழக்கில் எந்த வித மேல்முறையீடும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்கப்பட்ட உத்தரவை விட, தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
மேலும், கர்நாடகத்திற்கு 14 டிஎம்சி கூடுதலாக வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். தமிழக - கர்நாடக எல்லையில், கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளையில், தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால், தமிழக விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.