நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பாஜக.. குமாரசாமி-காங்கிரஸ் மீது எடியூரப்பா தாக்கு!
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி காரணமாக பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலே புறக்கணித்து வெளியே சென்றுள்ளது.
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி காரணமாக பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலே அவையை புறக்கணித்து வெளியே சென்றுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் முடிந்து பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு ஆட்சி அமைத்தது. இதை அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைத்தது. கடைசியில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே எடியூரப்பா பதவி விலகினார்.
இதனால் தற்போது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
இதில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தாக்கல் செய்த பின் அதுகுறித்து விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜகவின் எடியூரப்பா, குமாரசாமி மீது நிறைய குற்றச்சாட்டு வைத்தார். குமாரசாமி மக்களை மொத்தமாக ஏமாற்றிவிட்டார் என்று கோபமாக பேசினார்.
குமாரசாமி ஒரு பச்சோந்தி, அவர் தேவைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வார். அவருக்கு இப்போது காங்கிரஸ் தேவை என்பதால் அவர்களுடன் சேர்ந்துவிட்டார். இப்போது காங்கிரசுடன் இருந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்று அவர் நிறம் மாறிவிட்டார், என்றார்.
இதனால் அவையில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ்- மஜத உறுப்பினர்கள், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து பேச ஆரம்பித்தனர். சர்ச்சைகள் தொடர்ச்சியாக பாஜக அவையைவிட்டு வெளியேறியது. கர்நடகா சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை புறக்கணித்து பாஜக வெளிநடப்பு செய்தது.
பாஜக வெளிநடப்பு செய்த காரணத்தால் அவர்களின் எதிர்வாக்குகள் எதுவும் குமாரசாமிக்கு எதிராக விழவில்லை. இதனால் காங்கிரஸ்- மஜத கூட்டணி எளிதாக வெற்றிபெற்றது. குமாரசாமி எளிதாக பெரும்பான்மை நிரூபித்தார்.