காவிரியில் கூடுதல் தண்ணீர் கேட்பதா.. கர்நாடகாவின் பொறுமையை தமிழக அரசு சோதிக்கிறது: குமாரசாமி
ஹூப்ளி: கர்நாடகாவின் பொறுமையை தமிழகம் சோதிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
தென் மேற்கு பருவ மழையால் கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்து வந்தது. இதையடுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் நடுவர் மன்ற தீர்ப்புப்படி ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு காவிரியில் தற்காலிகமாக 52 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக அரசு மனிதாபிமான அடிப்படை யில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியது. பின்னர் தமிழகத்துக்கு தினமும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தர விட்டது. அதன்படி கர்நாடகா இரவு முதல் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
இந்த தண்ணீர் பாசனத் துக்கு போதுமானது அல்ல என்று தமிழக அரசு வாதிட்ட தால் அதுபற்றி காவிரி கண்காணிப்பு குழுவில் மனு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது. இதே போல் கர்நாடகமும் தனது தரப்பை காவிரி கண் காணிப்பு குழுவில் மனுவாக தாக்கல் செய்யுமாறும், அதன் பிறகு காவிரி கண்காணிப்பு குழு தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் காவிரி கண்காணிப்பு குழுவிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்காலிகமாக 52 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக பொதுப் பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்போது திறந்துவிடப்படும் தண்ணீரை கூட விடக்கூடாது என கர்நாடகாவில் பந்த் நடைபெற்றுவரும் நிலையில், தமிழகம் கூடுதல் (உரிய அளவு) தண்ணீரை கேட்பதற்கு, மதசார்பற்ற ஜனதாதள கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹூப்ளியில் இன்று நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, கூடுதல் தண்ணீரை கேட்டதன் மூலம், கர்நாடகாவின் பொறுமையை, தமிழகம் சோதித்து பார்க்கிறது. கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கேட்பதெல்லாம் கன்னடர்கள் பொறுமையை சோதிக்கும் செயல்.
கர்நாடகாவின் நலனை நிலைநாட்ட வேண்டுமானால், இங்கு மாநில கட்சியின் ஆட்சி அவசியம். அதை மதசார்பற்ற ஜனதாதளம்தான் செய்ய முடியும். பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் வாக்களித்தால் அவர்கள் தேசத்தின் பார்வையில்தான் அனைத்து பிரச்சினைகளையும் அணுகுவார்கள். அடுத்த தேர்தலில் என்னை முதல்வராக்குங்கள். கர்நாடக பிரச்சினைகளை தீர்க்க என்னிடத்தில் உரிய திட்டங்கள் உள்ளன.
நான் அதிகார மோகத்திற்காக இதை கேட்கவில்லை. கர்நாடகாவின் நலனை காப்பாற்றவே கேட்கிறேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார். மேலும் போராட்டக்காரர்கள் மீது சில இடங்களில் போலீசார் லத்தி சார்ஜ் செய்ததை குமாரசாமி கண்டித்தார்.