எலித் தொல்லை தாங்க முடியல... ஒரு எலியைப் பிடிக்க 650 ரூபாய் செலவு செய்த கர்நாடக அரசு !
பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள அரசு அலுவலகங்களில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தும் எலிகளைப் பிடிக்க, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.19.34 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள அரசு அலுவலகங்களில் எலிகளின் தொல்லை தாங்க முடுயல என புகார் எழுந்தது. முக்கிய அலுவலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் தஞ்சம் அடைந்துள்ளதால் அவைகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பெங்களூரு நகரில் உள்ள விதான் சபா, விகாஸா சவுதா உள்ளிட்ட பல்வேறு அலுவகங்களில் உள்ள கணினி மற்றும் இணைய இணைப்பு உள்ளிட்ட வயர்களை எலிகள் சேதப்படுத்துவதாகவும், இதனால் அலுவலக வேலைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பெங்களூரு நகரில் உள்ள அரசு அலுவலகங்களில் சுற்றித் திரிந்த எலிகளை பிடிக்க டெண்டர் மூலம் சில நிறுவனங்களை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு, இதுவரை ரூ.19.34 கோடி செலவானதாகவும், அந்த நிறுவனங்கள் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 50 எலிகளைப் பிடித்துள்ளதனர். இதன் மூலம் சராசரியாக ஒரு எலியைப் பிடிக்க ரூ.650 செலவானதாக கர்நாடகா அரசு கணக்குக் காட்டியுள்ளது.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏ பட்டேல் சிவராம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த தகவலை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.