ஆட்சியைப் பிடிக்க அவசரம்... உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக?
ஆட்சி அமைப்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை பாஜக.
டெல்லி: மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ஒவ்வொரு முறையும் தூக்கி வீசுகிறது பாஜக.
கடந்த காலங்களில் நினைத்த நேரத்தில் பிடிக்காத மாநில அரசுகளை மத்திய அரசின் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்துவிட முடியும். ஆனால் கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்குப் பின் அப்படி எல்லாம் நினைத்த நேரத்தில் மாநில அரசை தூக்கி எறிந்துவிட முடியாது.
பொதுவாக கடந்த 20 ஆண்டுகளில் மாநில அரசுகளைக் கலைப்பது, மாநில உரிமைகளைப் பேசுவது, ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு பிரதான ஒன்றாக இருக்கிறது. 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 1994-ல் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த பெஞ்ச்சில் திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்து பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அத்தீர்ப்பு ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்படுகிறது எனில் அப்போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ள கட்சிகளை அழைக்கலாம்; இல்லையெனில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் என்கிறது அத்தீர்ப்பு.
மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்
2006-ம் ஆண்டு இத்தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சால் மேலும் மெருகேற்றப்படுகிறது. அதில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றும் தவறானது அல்ல. ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சி அல்லது எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் தயங்கக் கூடாது. ஆளுநர் தமக்கு அதிகாரம் இருக்கிறது என ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது. ஆளுநர் ஒன்றும் எதேச்சதிகாரம் படைத்தவரும் அல்ல என்கிறது அத்தீர்ப்பு.
தீர்ப்பை மதிக்காத ஆளுநர்
ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு விரோதமாக, குறைந்த இடங்களைப் பெற்ற பாஜகவைத்தான் அம்மாநில ஆளுநர்கள் அழைத்தனர். இப்போது கர்நாடகாவில் பெரும்பான்மை கொண்ட ஜேடிஎஸ்- காங்கிரஸை அழைக்க ஆளுநர் மறுப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு
இதையே மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சுட்டிக்காட்டுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.