ஓலா, உபேருக்கு மரண அடி: டாக்சி சேவையை உடனே நிறுத்த கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூர்: உரிய உரிமம் பெறாமல் டாக்சிகள் இயக்கப்படுவதாகக் கூறி உபேர் மற்றும் ஓலா நிறுவனத்தின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.டி. நகரமான பெங்களூரில் பலர் ஓலா, உபேர் டாக்சிகளை தினம் தினம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உரிய உரிமம் பெறாமல் டாக்சிகள் இயக்கப்படுவதாகக் கூறி ஓலா மற்றும் உபேர் நிறுனத்தின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அப்ளிகேஷன்(App) மூலம் செயல்படும் டாக்சி நிறுவனங்கள் உரிய உரிமம் பெற வேண்டியது கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்தது. இதையடுத்தும் ஓலா மற்றும் உபேர் உரிமம் பெறாமல் செயல்படுவதாகக் கூறி அந்நிறுவனங்களின் டாக்சிகளை போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை விதிமீறலுக்காக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தடை குறித்து கர்நாடக மாநில போக்குவரத்து கமிஷனர் சனிக்கிழமை இரவு கூறுகையில்,
பல நிறுவனங்கள் உரிமம் பெறாமல் டாக்சிகளை இயக்கி வருகின்றன. இது மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 93ஆர்/டபுள்யூ 193 ஐ மீறுவதாகும். எனவே, போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய உரிமம் பெறாத நிறுவனங்கள் தங்களின் சேவையை உடனடியாக நிறுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெங்களூரில் மட்டும் சுமார் 50 ஆயிரம் டாக்சிகள் ஓடுகின்றன. டாக்சிகளை பயன்படுத்தி பழகிய மக்களுக்கு ஓலா, உபேர் மீதான தடை அதிர்ச்சியை அளித்துள்ளது.