ஜெ. வழக்கு அப்பீல் மனுவில் என்னென்ன தப்புகள் திருத்தப்பட்டன?
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் இருந்த தவறுகள் எவை என்ற தகவல் வெளியாகியுள்ளன. இந்த தவறுகள் திருத்தப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சில தவறுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, தவறுகளை திருத்தம் செய்து மீண்டும் மனுவை தாக்கல் செய்துள்ளது கர்நாடக அசு தரப்பு.
2 ஆயிரம் பக்கங்கள்
மேல்முறையீட்டு மனுவை ஆச்சார்யா தயாரித்தார். மொத்தம் 2,377 பக்கங்கள் கொண்ட இம்மனுவை, கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டிலும், ஆச்சார்யாவின் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் செளட்டாவும் உச்ச நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளரிடம் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
தனி குழு
9 தொகுப்புகளாக உள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றப் பதிவுத் துறை, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்த்த 6 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்திருந்தது. அந்த குழுதான், கர்நாடக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்த மனுவில் 10க்கும் மேற்பட்ட தவறுகள் இருப்பதை உச்ச நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் அறிவித்தது. அதைத் தலைமை பதிவாளர் திருத்தம் செய்து கொடுக்குமாறு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை கேட்டுக்கொண்டிருந்தார்.
தப்புகள்
அந்த தவறுகள் திருத்தப்பட்டுதான் தற்போது மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய, மேல்முறையீட்டு மனுவில் 1,223, 1,453 ஆகிய இரண்டு பக்கங்களில் எதுவும் எழுதப்படாமல் காலி தாள்களாக இருந்தன. 1,605 முதல் 1,629 வரை உள்ள தாள்களின் மேற்பகுதியில் முறையாகப் பக்க எண் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் மூலப் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை.
ஆவணங்கள் மிஸ்சிங்
மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளின் ஆணைகள் வெளியான தேதிகள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிபதிகள் குன்ஹா, குமாரசாமி வழங்கிய தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை இணைக்கவில்லை.
ஆச்சாரியா நியமனம்
வழக்கில் வெளியான இறுதித் தீர்ப்பு, மனு தீப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கியக் குறிப்புகள், வெளியிடப்பட்ட அரசாணைகள், பின் இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இல்லை. குறிப்பாக 28.4.2015 அன்று அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டதற்கான கர்நாடக அரசின் அரசாணை நகல் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக, மேல்முறையீட்டு மனு தயாரிக்கப் பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை.
சகஜம்
இந்த பிழைகள் எல்லாம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் திருத்தப்பட்டுள்ளன. 2,000 பக்கங்களுக்கு மேல் தயாரிக்கப்படும் மனுவில் சிறு சிறு பிழைகள் வருவது சாதாரணமானதான் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று, தனது ஜூனியர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் ஆச்சாரியா. திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை எப்போது நடைபெறும் என்பது பற்றி அடுத்த வாரத்தில் தகவல் வெளியாகலாம்.