இந்த '2' காரணங்களால் உபேர், ஓலா பைக் டாக்சிகளை பறிமுதல் செய்த கர்நாடக அரசு
பெங்களூர்: முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி உபேர் மற்றும் ஓலா நிறுவன பைக் டாக்சிகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உபேர் மற்றும் ஓலா ஆகிய கேப் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தன. உபேர் மோட்டோ, ஓலா பைக் ஆகிய பைக் டாக்சி சேவை புதுமையானதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 5 உபேர் மோட்டோக்கள், 2 ஓலா பைக்குகளை கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளது. முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கர்நாடக போக்குவரத்து கமிஷனர் ராமேகவுடா கூறுகையில்,
உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை துவக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இதன் மூலம் அந்நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறியுள்ளன. பைக் டாக்சி சேவையை துவங்க விரும்பும் நிறுவனங்கள் முதலில் சாலை போக்குவரத்து அத்தாரிட்டியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
பைக் டாக்சிகளில் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் உபேர், ஓலா பைக் டாக்சிகள் வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட பைக் டாக்சிகளின் உரிமையாளர்கள் சட்டத்தை மீறியதற்காக அபராதம் தெலுத்த வேண்டும். இதற்கிடையே உபேர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.