இஷ்ரத் ஜஹான் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் பட்டேல் திடீர் ராஜினாமா!
குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் பட்டேல் ராஜினாமா செய்துள்ளார்.
அகமதாபாத்: சர்ச்சைக்குரிய குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயந்த் பட்டேல் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது இஷ்ரத் ஜஹான் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இந்த வழக்கை மேற்பார்வையும் செய்து வந்தார் ஜெயந்த் படேல். குஜராத் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைம நீதிபதியாக இருந்த நிலையில் ஜெயந்த் படேல் திடீரென கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக ஜெயந்த் பட்டேல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு ஜெயந்த் பட்டேல் மாற்றப்பட்டார்.
தலைமை நீதிபதியாக பதவி உயர்வு தராமல் அலகாபாத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தமது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜெயந்த் படேல். தமது ராஜினாமா கடிதத்தை கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜிக்கு ஜெயந்த் பட்டேல் அனுப்பி வைத்துள்ளார்.