பெங்களூருக்குள் நுழைய தொகாடியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஹைகோர்ட் மறுப்பு
பெங்களூரு: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியாவுக்கு பெங்களூரு நகருக்குள் நுழைய போலீஸ் கமிஷனர் விதித்த தடையை நீக்க முடியாது என்று கர்நாடக ஹைகோர்ட் தெரிவித்துவிட்டது.
பெங்களூரு, பசவனகுடியில் வரும் 8ம்தேதி விராட் ஹிந்து மாநாடு என்ற பெயரில், இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு நடத்த உள்ளன. இந்த மாநாட்டில் தொகாடியா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: பெங்களூரு நகர எல்லைக்குட்பட்ட பசவனகுடியில் வரும் 8ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் விஷ்வ ஹிந்து பரிஷத்அமைப்பின் தலைவர் பிரவின்தொகாடியா கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரவின் தொகாடியா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையி்ல் மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் நகரி்ல் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே அவர் பெங்களூரு நகருக்குள் நுழைவதற்கு வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
இந்த உத்தரவு ஜனநாயக விரோதமானது என்று பாஜக குற்றம்சாட்டியது. சட்டப்பேரவையிலும் இப்பிரச்சினையை எழுப்பியது. அரசு தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பேரவையில் பாஜக நேற்று வெளிநடப்பும் செய்தது.
இதனிடையே, கமிஷனரின், உத்தரவை எதிர்த்து தொகாடியா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவைப்படும் நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்கலாம். அதற்கான முழு அதிகாரமும் கமிஷனருக்கு உள்ளது. எனவே தடையை நீக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறிவிட்டது.