ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை: கர்நாடக அரசு நிராகரிப்பு
பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கர்நாடக மாநில அமைச்சரவை நிராகரித்துள்ளது.
பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16ஆம்தேதி அவரது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆளும் காங்கிரஸ் அரசு உத்தரவின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளது.
ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், அதிகாரியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கர்நாடக எதிர்க்கட்சிகளான பாஜக சட்டமன்ற குழு தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் ஊர்வலமாக சென்று ஆளுநரிடம், சி.பி.ஐ. விசாரணை கோரி மனு கொடுத்தனர்.
அமைச்சரவைக் கூட்டம்
இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதில் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்தி நீதியை நிலை நாட்டுவார்கள் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சி.பி.ஐ விசாரணை கிடையாது
கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணம் குறித்து மாநில போலீசாரே பாகுபாடற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க தேவையில்லை என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சி.ஐ.டி. விசாரணை மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்' என்றார்.
வீரப்ப மொய்லி
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அரசியல் காரணங்களுக்காகவே இதுபோன்ற குரல்கள் எழுகின்றன என்றார். கர்நாடக மாநில போலீசார் இந்த வழக்கை திறம்பட விசாரிக்கும் தகுதிபடைத்தவர்கள் என மாநில முதல்வர் சித்தராமையா நினைக்கிறார். எனவே சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத்சிங் பேச்சு
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக பாஜக எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசினர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நான் பேசினேன். இந்த வழக்கு விசாரணை குறித்த விரிவான தகவல்களை 2 நாளில் அனுப்பி வைப்பதாக அவர் கூறினார். அந்த மாநிலம் விரும்பினால், அந்த மாநில அரசு சிபாரிசு செய்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயார் என்று கூறியுள்ளார்.