ஜெ.வழக்கு தீர்ப்பில் பிழை: சட்ட செயலர் படித்து பார்க்க கர்நாடகா சட்ட அமைச்சர் உத்தரவு
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக படிக்க சட்டத்துறை செயலாளருக்கு, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
நீதிபதியின் கூட்டல் கணக்கில் பிழை உள்ளதாக கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக படிக்க சட்டத்துறை செயலாளருக்கு, கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா உத்தரவிட்டுள்ளார். மேலும் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.