கொரோனாவா இருக்குமோ? சந்தேகத்தின் பேரில் கர்நாடகத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
உடுப்பி: எனக்கு கொரோனா வைரஸ். நீங்கள் எல்லாம் பத்திரமாக இருங்கள் என சந்தேகத்தின் பேரில் கர்நாடகத்தில் 56 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தொலைகாட்சி, பேப்பர், ஊடகங்கள், மருத்துவமனைகள் என கொரோனாவுக்கான அறிகுறிகள் குறித்து ஆங்காங்கே விளக்கமாக கூறப்படுகின்றன.
எனினும் மக்கள் சாதாரண காய்ச்சல் வந்தாலே தனக்கு கொரோனா பாதிப்பிருக்குமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு அளித்தும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
பயிற்சியாளர்
இதற்கு நல்ல உதாரணம் கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. உடுப்பி மாவட்டம் பிரம்மவார் தாலுக்காவை சேர்ந்தவர் 56 வயது முதியவர். இவர் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் அவர் புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தார்.
தற்கொலை கடிதம்
இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தை போலீஸார் கண்டறிந்தனர். அதில் அவர் தனக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு கொள்வதாக தெரிவித்திருந்தார். மேலும் தன் குடும்பத்தினர் கொரோனா பாதிப்பிலிருந்து உஷாராக இருக்குமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது அவருக்கு கொரோனா வைரஸுக்கான எந்த அறிகுறியும் இல்லை.
Recommended Video
விசாரணை
மேலும் அவர் வயோதிக காரணமாக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர் ஞாயிற்றுக்கிழமை முதலே சற்று பதற்றமாக இருந்தார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.