கூவத்தூர் கோஷ்டியெல்லம் பிச்சை வாங்கனும்.. இந்தியாவின் பணக்கார அமைச்சர்.. யார் இந்த சிவகுமார்?
பெங்களூர்: கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஐடி அதிகாரிகள் ஷாக் கொடுத்துள்ளனர். ஊழல்வாதி என்ற விமர்சனங்களால் தனது அமைச்சரவையில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்திருந்த சித்தராமையாவை சில காலம் கழித்து வேறு வழியில்லாமல் அமைச்சரவையில் சேர்க்க வைத்த அளவுக்கு மேலிட செல்வாக்கு கொண்ட சிவகுமார் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
சிவகுமார் எப்படிப்பட்டவர் என்பதை கர்நாடகா பல காலம் பார்த்துதான் வருகிறது. தேசிய கட்சியில் இருந்தபோதிலும், நம்மூர் அரசியல்வாதிகள் போல சுற்றிலும் பத்து பேர் புடை சூழ, தெலுங்கு பட பணக்கார கதாப்பாத்திரங்கள் போல புளுதி பறக்கும் கார்கள் புடை சூழ அவர் செல்லும் தோரணை எதிராளிகள் வயிற்றில் புளி கரைக்கும்.
அரசியல்வாதி என்ற முகம் அவருக்கு தனது தொழில் செல்வாக்கை விரிவுபடுத்தவே உதவியது. கிரானைட், ரியல் எஸ்டேட் என இவர் கால் வைக்காத தொழில்களே கிடையாது.
எல்லா கட்சியிலும் நண்பர்கள்
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தனது தொழில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இந்த காங்கிரசின் கர்நாடக மாநில முன்னாள் செயல் தலைவரான டி.கே.சிவகுமார், பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அவ்வளவு 'க்ளோஸ்' என்பதை யாராலும் எளிதில் நம்ப முடியாது.
இதுதான் டி.கே.சிவகுமார்.
செல்வந்தர்
இப்படி வளைத்து, வளைத்து தொழில்களில் காட்டிய ஆதிக்கம்தான், இன்று இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய செல்வமிகு அமைச்சர் என்ற பெயரை சிவகுமாருக்கு ஈட்டித் தந்துள்ளது. 2013 சட்டசபை தேர்தலில் அவரே காட்சிய கணக்குப்படி சொத்து மதிப்பு ரூ.251 கோடி. ஊழல் வழக்கு உள்ளதையும் அந்த பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொண்டிருந்தார் டி.கே.சிவகுமார்.
அறிவித்த சொத்து
சிவகுமார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் இதோ உங்களுக்காக: அரசியல் அறிவியலில் மாஸ்டர் டிகிரி படித்த இவரின் சொத்து மதிப்பு 2011-12ல் (காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டம்) ரூ.251.5 கோடிகளாகும். அதே நேரம் ரூ.105 கோடி கடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாரர்.
கிரிமினல் வழக்கு
ஆண்டுக்கு ரூ.5853300 வருவாய் வருவதாக குறிப்பிட்ட சிவகுமார், தன் மீது 2 கிரிமினல் வழக்குகள் (ஊழல் தொடர்பானது) உள்ளதாகவும் கூறியுள்ளார். மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.6,31,049 என சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். இவரிடம் 2.18 கிலோ தங்கம், 12.6 கிலோ வெள்ளி உள்ளதாகவும், அசையும் சொத்துக்கள் ரூ.46 கோடிக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பா நோக்கம்?
சிவகுமார் பின்னணி பற்றி இன்று, நேற்று பாஜகவுக்கு தெரியும் என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்காத வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், இப்போது சிவகுமாரை நெருக்கடிக்குள்ளாக்குவது ஊழலை ஒழிக்கவா? உண்மையில் ஊழலை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டவா?