ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட கர்நாடக அமைச்சரின் மனைவி
பெங்களூரு: மாணவர் விடுதிகளுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்வதற்கான குத்தகை அளிக்க சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயாவின் மனைவி லஞ்சம் வாங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் ஆஞ்சநேயாவின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சமூக நலத்துறையில் மாணவர் விடுதிக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்வதில் முறைகேடு நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்வர்ணா என்ற கன்னட செய்தி சேனல் ரகசிய கேமரா மூலம் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளது.
ரகசிய கேமரா இது தொடர்பாக சமூக நலத்துறையில் மாணவர் விடுதிகளுக்கு உணவுப் பொருட்கள் வினியோகத்திற்கு குத்தகை அளிப்பதற்கு நடந்த முறைகேடு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
அந்த சேனல் ஒளிபரப்பிய காட்சியில் சமூக நலத்துறை துணை இயக்குனர் பிரபாகருடன் டிவியைச் சேர்ந்த ஊழியர் சமூக நலத்துறைக்குட்பட்ட மாணவர் விடுதிகளுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம் செய்ய குத்தகை தர வேண்டும் என மொபைல் போனில் பேரம் பேசுகிறார். டிவி ஊழியர் என்பது தெரியாமல் பணத்துடன் வரும்படி துணை இயக்குனர் கூறுகிறார். இதையடுத்து டிவி ஊழியரும் பணத்தை காகிதத்தால் சுற்றி எடுத்துச் செல்கிறார்.
அவர்களை ஜெயமஹாலில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு துணை இயக்குனரே அழைத்துச் செல்வதும் அமைச்சர் மனைவி விஜயா முன்னிலையில் ஒரு அறையின் மேஜை மீது அந்த காகித பொட்டலத்தை டிவி ஊழியர் வைப்பதும் காட்சிகளாக விரிந்தன. இவை அனைத்தையும் டிவி ஊழியருடன் சென்றிருந்த நபர் வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
அமைச்சர் வீட்டில் இருந்து துணை இயக்குனர் மற்றும் டிவி ஊழியர்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில் துணை இயக்குனரிடம் இருந்து டிவி ஊழியருக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது. உடனடியாக அமைச்சர் வீட்டுக்கு மீண்டும் வரும்படி துணை இயக்குனர் அழைப்பு விடுக்கிறார். இவை அனைத்தையும் கன்னட செய்தி சேனல் அப்படியே ஆடியோவாக ஒளிபரப்பியது. ஏழு லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் மனைவியே ஊழலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிபரப்பானதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவை மாநில காங்கிரசில் மட்டுமல்லாது டெல்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின் உரிய ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்த முதல் ஊழல் இது என்பது குறிப்பிடத்தக்கது.