பெங்களூர் சாந்திநகர் தொகுதியில் வெற்றி நிச்சயம்.. ஆம் ஆத்மி வேட்பாளர் ரேணுகா விஸ்வநாதன் நம்பிக்கை
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரேணுகா விஸ்வநாதன், பெங்களூரில் தமிழர்கள் மிக அதிக அளவுக்கு வசிக்கும் சாந்திநகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பெங்களூர்: ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாந்திநகர் தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரேணுகா விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில் வரும் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆம் ஆத்மியும் களம் இறங்கியுள்ளது. மொத்தம் 18 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி.
அதில் முக்கியமான ஒரு வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரேணுகா விஸ்வநாதன். பெங்களூரில் தமிழர்கள் மிக அதிக அளவுக்கு வசிக்கும் சாந்திநகர் தொகுதியில் ரேணுகா விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.
அத்தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள காங்கிரசின் என்.ஏ.ஹாரீஷை (நலபாட் அகமது ஹாரீஷ்) எதிர்த்து களம் காண்கிறார் ரேணுகா விஸ்வநாதன். ஹாரீஷின் மகன் தாக்குதல் வழக்கு ஒன்றில் கைதாகி சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எனவே நீண்ட யோசனையில் இருந்தது காங்கிரஸ். சிவில் சொசைட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தபோதும், கடைசி பட்டியலில் ஹாரீஷுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது காங்கிரஸ்.
உத்தர கர்நாடகா மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை பெற்ற ரேணுகா விஸ்வநாதன், நான்கு வருடங்கள் முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். டெல்லியில் ஆம் ஆத்மி நியாயமான முறையில் பதவிக்கு வந்ததையும், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவதையும் பார்த்த பிறகு ரேணுகா விஸ்வநாதன் இந்த முடிவை எடுத்தார்.
இதுபற்றி ரேணுகா விஸ்வநாதன் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அரசியல் பின்புலம், குடும்ப பின்புலம் பார்க்காமல் வேட்பாளர்களை மெரிட் அடிப்படையில் தேர்வு செய்கிறது. ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளிலும், பணிக்கு ஏற்றவரா என்று பார்த்துதான் வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறார்கள்" என்றார்.
ரேணுகா விஸ்வநாதனுக்கு, அவரது 98 வயது டாக்டர் தாய் உட்பட குடும்பத்தார் அனைவருமே ஆதரவு அளித்துள்ளனர். ஏற்கனவே நிர்வாகியாக அரசு பணியில் இருந்த ரேணுகா விஸ்வநாதனுக்கு, மக்களோடு இணைந்து மக்களுக்காக பணியாற்றிய அனுபவும், அறிவும் உள்ளது. சாந்திநகரிலுள்ள மக்கள் பிற கட்சியினரின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளதாக கருதும், ரேணுகா விஸ்வநாதன், ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி, அனைவருமே மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்.
மக்கள் இப்போதே அந்த மாற்றத்தை ரேணுகா விஸ்வநாதன் மூலமாக சந்தித்து வருகிறார்கள். தெருவுக்கு தெரு, வீடு வீடாக ரேணுகா விஸ்வநாதன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். வேறு எந்த கட்சி வேட்பாளர்களும் இந்த அளவுக்கு நேரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபடவில்லை. கடந்த 3 மாதங்களாக ரேணுகா விஸ்வநாதன் பிரச்சாரம் செய்து வருகிறார். வளர்ச்சிக்காக ஆம் ஆத்மி வைத்துள்ள கொள்கைகள் பற்றி மக்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ரேணுகா விஸ்வநாதன் மற்றும் அவரின் குழு, வார்டு மட்டத்திற்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கையை தயார் செய்து அசத்தியுள்ளது. சாக்கடை, குப்பை, மோசமான சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகள் வார்டுக்கு வார்டு மாறுபடுகின்றன என்பதால் தனித்தனி தேர்தல் அறிக்கை அவசியமாகிறது.
எம்எல்ஏ நிதியில் இருந்து நிதியை செலவிடுவதும், பரிசு பொருட்களை மக்களிடம் வழங்குவதும்தான் எம்எல்ஏக்கள் வேலை என்று மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார், ரேணுகா விஸ்வநாதன். மக்கள் நலனுக்கான சட்டங்களை இயற்ற சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்று விவாதிப்பதும், தொகுதி பிரச்சினைகளை சட்டசபையில் பேசி தீர்வு காண்பதுமான் எம்எல்ஏ பணி என்கிறார் இவர்.
ரேணுகா விஸ்வநாதன் மேலும் கூறுகையில், மக்களை நான் சந்திக்கும்போதெல்லாம், மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்கள். என்ன அந்த மாற்றம்? காங்கிரஸ் கர்நாடகாவிலும், பாஜக மத்தியிலும் ஆட்சியில் உள்ளது. இரு ஆட்சி மீதும், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே மாற்றத்திற்காக மக்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுக்கு பெஸ்ட் ஆப்ஷனாக உள்ளது ஆம் ஆத்மி. மக்கள் எங்களுக்கு வாய்ப்பை தந்து அதன் மூலம், மாற்றங்களை பார்க்க போகிறார்கள், என்றார் அவர்.