கர்நாடக மேலவை தேர்தல்: பாஜகவைவிட இரு மடங்கு தொகுதிகளை அதிகம் வென்ற காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற மேலவை தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி அதிகப்படியான தொகுதிகளை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இரண்டாவது இடத்தை பாஜக பிடித்துள்ளது.
75 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் 25 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மொத்தம் 13 சீட்டுகளை சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரசும், 6 இடங்களை பாஜகவும், 4 இடங்களை தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளமும் பிடித்துள்ளன. 2 இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தேர்தலில் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி, தாலுகா, ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். சில மாதங்கள் முன்பு நடந்த, பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னணி பெற்று, காங்கிரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. மஜதவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் பெங்களூர் மாநகராட்சியை பிடிக்க வேண்டியதாயிற்று.
இந்நிலையில், மேலவை தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது, சித்தராமையாவுக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்துள்ளது.