பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. நித்தியானந்தா சாபம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் செயல்பட்டு வரும் நித்தியானந்தா குருகுல் எனப்படும் மையத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
இந்த ரெய்டின்போது மீடியாக்களைச் சேர்ந்தவர்களுக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டதாகவும், அதில் நித்தியானந்தா ஆட்கள், பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் அதிகாரிகளுடனும், நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும் புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல கமிஷன் செயலாளர் உமேஷ் ஆரத்தியா மாநில அரசிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் குறித்து கணக்கெடுத்தனர். இதற்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் மூண்டது. மேலும் வன்முறையும் மூண்டதாக தெரிகிறது. இதை பல்வேறு டிவிநிறுவனங்களின் செய்தியாளர்கள் படம் பிடித்தபோது அவர்கள் மீது நித்தியானந்தா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
என்ன பிரச்சினை...?
25 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா ஆசிரமத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 100 பேரை தங்கவைத்து அவர்களது விருப்பதை மீறி மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குகிறார். ஆண், பெண் குழந்தைகள் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுக்கு புகார் வந்தது.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நித்தியானந்தா ஆசிரமத்துக்கு உமேஷ் ஆரத்தியா சென்றபோது அவரை உள்ளே விடவில்லை. அதனால் அவர் நித்தியானந்தாவின் மேல் கர்நாடக அரசிடம் புகார் செய்தார். இதையடுத்து தலையிட்ட முதல்வர் சித்தராமையா, உமேஷ் ஆரத்தியா மற்றும் ராம்நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரை போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்த உத்தரவடி்டார்.
அப்போதுதான் இந்த அடிதடி மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் உமேஷ் ஆரத்தியா. அதில், நித்தியானந்தா, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்தியானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளுறை தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார்.
அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ளார். இதன் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு நித்தியானந்தா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நித்தியானந்தா கருத்து தெரிவிக்கையில், என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டுள்ளார்.
நித்தியானந்தா குருகுல் விளக்கம்
மேலும் நித்தியானந்தா குருகுல் அளித்துள்ள ஒரு விளக்கத்தில், சில அதிகாரிகள் குருகுல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கொடுமைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து குருகுல் நிர்வாகிகளும், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களும் சட்டப்பூர்வமான நோட்டீஸ்களை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பான புகார் கர்நாக முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., கலெக்டர் ஆகியோருக்கும் புகார் நகல் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகளை கொடுமைப்படுத்திய அதிகாரிகள் குறித்து 40க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும், கோபமும் வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது குழந்தைகள் குருகுலத்தி்ல நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.