கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: 60% லிங்காயத்துகள் ஆதரவு பாஜகவுக்கு: ஏபிபி டிவி சர்வே
கர்நாடகாவில் 60 சதவிகித லிங்காயத்துகள் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாக ஏபிபி டிவி சர்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு: லிங்காயத்துகளை தனி மதமாக காங்கிரஸ் அரசு அறிவித்த நிலையிலும் 60 சதவிகிதம் பேர் பாஜகவை ஆதரிப்பதாக கூறியுள்ளதாக ஏபிபி டிவி சர்வே தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே மாதத்துடன் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மே 15ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நாளாகும்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி டிவி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் அதன் மற்றொரு பிரிவான வீரசைவர்கள் வாக்குகள் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
புரட்சியாளர் பசவண்ணர் உபதேசங்களை ஏற்றுக்கொண்டு வாழும், லிங்காயத்துகள் பெரும்பாலும், பாஜகவுக்கு வாக்களிப்பவர்களாகும். ஆனால், லிங்காயத்து வாக்குகளை ஈர்ப்பதற்காக அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி தனி மதமாக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் அறிவித்தார்.
தனி மதமாக லிங்காயத்துகளை அறிவித்த பிறகும் பெரும்பாலானோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எப்போதுமே பாஜகவிற்கே பெரும்பான்மையான லிங்காயத்துகள் ஆதரவளிப்பது வழக்கம். இம்முறையும் 60 சதவிகிதம் பேர் பாஜகவுக்கே வாக்களிப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.