மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்: கர்நாடகா தொடர்ந்து போர்க்கொடி
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கி 5 வாரங்கள் கடந்த நிலையில் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், நதிநீர் பங்கீட்டில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநில பிரநிதிகளிடையே கடந்த 9ம் தேதி ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தரப்பில் அதன் செயலாளர் யு.பி.சிங் நடத்தி முடித்தார்.
திட்ட அறிக்கை
இதையடுத்து நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக செயல் திட்ட அறிக்கை ஒன்றை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
கர்நாடக அரசு ஒப்புதல்
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு இன்று எழுத்துப்பூர்வ அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்திற்கு 70 டிஎம்சி தண்ணீர் தரவில்லை கர்நாடகா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
குறைவாக திறப்பு
ஜூன் முதல் பிப்ரவரி வரை 184.50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்திருக்க வேண்டும். ஆனால் வறட்சி காரணமாக, 114.185 டிஎம்சி தண்ணீரைத்தான் தமிழகத்திற்கு திறக்க முடிந்தது என மத்திய நீர்வளத்துறை செயலாளர் உத்தரவின்படி கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்துள்ளது.
கண்காணிப்புக்குழு அமைக்கலாம்
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசு தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. காவிரி மேற்பார்வை, கண்காணிப்புக்குழு போன்றவற்றை அமைக்க ஆட்சேபம் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகளின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.